Sunday, September 8, 2024
Home » தமிழ்நாடு இல்லத்தில் ரூ.257 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

தமிழ்நாடு இல்லத்தில் ரூ.257 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

by Lavanya

சென்னை: தமிழ்நாடு இல்லத்தில் ரூ.257 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் இன்று (26.7.2024) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக, புதுதில்லி, சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 18.06.2021 அன்று முதலமைச்சர் தலைமையில் புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், புதுதில்லி மிக தீவிர நில அதிர்வு மண்டலம் IV -ஆக மறுவகைப்படுத்தப்படுத்துள்ளதை கருத்தில் கொண்டு வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தினை பழைய கட்டடங்களை முழுவதுமாக இடித்து மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள விரிவான ஆலோசனை நடத்தினார்.

அதன்படி, விரிவான வடிவமைப்பு மற்றும் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட அலுவலகங்களிலிருந்து உரிய ஒப்புதல்கள் பெறப்பட்டன. புதியதாக கட்டப்படவுள்ள இக்கட்டடம் மிக தீவிர நில அதிர்வை எதிர்கொள்ளும் கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டு, இந்திய தொழில்நுட்பக்கழகம், சென்னை (IIT, Madras) மூலம் ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் பொதுத் துறையால் புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தை மறுசீரமைத்து புதிய கட்டடங்களை கட்டுவதற்கு 257 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சாணயக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்திற்கான மறுமேம்பாட்டு திட்டத்தில் கட்டப்படவுள்ள புதிய கட்டடங்களின் விவரங்கள் இப்புதிய கட்டடம் மிக முக்கிய பிரமுகர் தொகுதி (VVIP Block), விருந்தினர் மாளிகை தொகுதி (Guest Block) மற்றும் அலுவலர்கள் குடியிருப்புத் தொகுதி (Officers Quarters Block) ஆகியவற்றை உள்ளடக்கியது. இக்கட்டடம், 3 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்களைக் கொண்டதாகவும், மொத்தம் 3 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது.

மேலும், மிக முக்கிய பிரமுகர் அறை, 39 முக்கிய பிரமுகர்கள் அறைகள், 60 உயர்தர அறைகள் (Deluxe Rooms), 72 படுக்கை வசதிகள் கொண்ட தங்கும் கூடம் (Dormitory), பல்நோக்கு அரங்கம், 3 உணவருந்தும் அறைகள், காத்திருப்பு அறைகள், கண்காட்சி அறை, மிக முக்கிய பிரமுகர்களின் முகாம் அலுவலகம், சந்திப்பு அறைகள், உடற்பயிற்சி மையம், வணிக மையம், நுாலகம் மற்றும் பல்வேறு வசதிகளுடன் இப்புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் .எ.வ. வேலு, தலைமைச் செயலாளர்.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்.மங்கத் ராம் சர்மா

இ.ஆ.ப., பொதுத் துறை செயலாளர்.ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., பொதுத் துறை அரசு துணைச் செயலாளர் (மரபு). ஜெ.இ. பத்மஜா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக புதுதில்லியிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்.டி.ஆர். பாலு, ஆ. ராசா, திருச்சி சிவா, தொல் திருமாவளவன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, சு. வெங்கடேசன், துரை வைகோ, வை. செல்வராஜ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, இ.ஆ.ப., கூடுதல் உள்ளுறை ஆணையாளர்.ஆஷிஷ் குமார், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

You may also like

Leave a Comment

5 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi