புதுடெல்லி: டெல்லி சுல்தான்புரியில் கடந்த 1984ம் ஆண்டு (இந்திரா காந்தி சுடப்பட்ட சமயம்) நடந்த சீக்கியர்களுக்கு எதிரான ஒரு கலவரத்தில் சுர்ஜித் சிங் என்பவர் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் மாஜி காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமார் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணை சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல் முன் வந்தது. அதை விசாரித்த அவர், அரசு தரப்பு குற்றத்தை நிரூபிக்க தவறியதால், சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவரான சஜ்ஜன் குமாருக்கு அளித்து அவரை வழக்கிலிருந்து விடுவித்ததுடன், அவரோடு குற்றம் சாட்டப்பட்ட வேத பிரகாஷ் பியல், பிரம்மானந்த குப்தா ஆகிய இருவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.