ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் ஈட்டலாம் என பல் மருத்துவரிடம் ரூ.1.20 கோடி மோசடி : இருவர் கைது

சென்னை: வானகரத்தை சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘எனக்கு முகநூல் மூலம் ஆன்லைன் முதலீடு வர்த்தகம் தொடர்பான விளம்பரம் வந்தது. அதைப் பார்த்து தொடர்பு கொண்ட போது, எனது செல்போன் எண்ணை ஒரு வாட்ஸ் அப் குழுவில் இணைத்தனர். அந்த குழுவில் பேசிய நபர்கள், லிங்க் ஒன்றை அனுப்பினர். அந்த லிங்க் வழியே நான் முதலீடு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தேன்.

முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக லாபம் கிடைக்கும் என அவர்கள் கூறிய ஆசை வர்த்தைகளை நம்பி, பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.1.19 கோடியை பலகட்டங்களாக செலுத்தினேன். ஒவ்வொரு முறை நான் பணம் செலுத்தும் போதும், அதற்கு லாபம் வந்தது போலவும், முதலீடு செய்யப்பட்டது போலவும் அவர்கள் அந்த செயலி மூலமாக காண்பித்தனர். இதையடுத்து, நான் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்ற போது, அவர்கள் வெவ்வேறு காரணங்களைக் கூறி மேலும் பணம் கேட்டனர்.

இதனால், சந்தேகமடைந்து, பணத்தை எடுக்க முயன்றேன். ஆனால், பணத்தை எடுக்க முடியவில்லை. அப்போது தான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே, இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில், மோசடியில் ஈடுபட்டது திருவொற்றியூரை சேர்ந்த சதீஷ்குமார் (35) மற்றும் சதீஷ் (26) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.23.80 லட்சம், 2 தங்க செயின், செல்போன்கள், லேப்டாப், வங்கி காசோலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறுகையில், சமீப காலமாக ஆன்லைன் முதலீடு, ஆன்லைன் பகுதி நேர வேலை தொடர்பாக சமூக வலைதளங்களில் போலி விளம்பரங்கள் மூலம் ஆசைகாட்டி பணத்தை பெற்று ஏமாற்றி வருகின்றனர். எனவே, முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று வரும் போலியான விளம்பரங்களை கண்டு, பணத்தை அனுப்பி யாரும் ஏமாற வேண்டாம். பொதுமக்கள் இது போன்ற மோசடியில் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணிலும் http://cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

Related posts

ஐசிசி உலக கோப்பை டி20 பைனல்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி; 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அசத்தல்

சிபிஐ அதிகாரி போல் பேசி ரூ50 லட்சம் மோசடி செய்த கேரள வாலிபர் பிடிபட்டார்: சொகுசு கார், 47 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி : 14 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்பு