பெங்களூரு: குறிப்பிட்ட மதத்தினரையும், கர்நாடகா முதல்வர் சித்தராமையாவையும் அவதூறாக பேசிய குற்றச்சாட்டின் கீழ், பாஜக எம்பி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்பி அனந்த் குமார் ஹெக்டே, அடிக்கடி மத ரீதியான சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருவார். கடந்த மாதம் பாபர் மசூதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘மாநிலங்களுக்கான நிதியை ஒன்றிய அரசு வழங்காமல் மறுத்து வருவதாக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். மேலும் அவர் பிரதமர் மோடிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார்.
குறிப்பிட்ட சமூகத்தினரை திருப்திப்படுத்துவதற்காக முதல்வர் சித்தராமையா செயல்பட்டு வருகிறார். அவரை ‘சித்தராமுல்லா கான்’ என்று அழைக்கலாம். டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் காலிஸ்தானியர்கள். அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி வருகிறது. அவர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல’ என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறினார். அதனால் முங்கோட் போலீசார், தானாக முன்வந்து குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதித்ததாகவும், முதல்வர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக மற்றொரு வழக்கும் பதிவு செய்துள்ளனர்.