Friday, July 5, 2024
Home » அவதூறு தகவல்களை வெளியிட்டு வரும் தமிழக பாஜக தலைவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்படும்: டி.ஆர்.பாலு எம்பி பேச்சு

அவதூறு தகவல்களை வெளியிட்டு வரும் தமிழக பாஜக தலைவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்படும்: டி.ஆர்.பாலு எம்பி பேச்சு

by MuthuKumar

பல்லாவரம்: தொடர்ந்து என் மீது அவதூறு தகவல்களை வெளியிட்டு வரும் தமிழக பாஜக தலைவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்படும் என டி.ஆர்.பாலு எம்பி கூறியுள்ளார். பல்லாவரம் அடுத்த பம்மல் மின்வாரிய அலுவலகம் அருகேயுள்ள மைதானத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டலக்குழு தலைவர் வே.கருணாநிதி தலைமை வகித்தார். கூட்டத்தில், திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர்.பாலு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து டி.ஆர்.பாலு பேசியதாவது: திமுக தலைவர் மிகப்பெரிய சவால்களை சந்தித்துக்கொண்டு தமிழக மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளை முறைப்படி யாருக்கும் அச்சப்படாமல் தொடர்ந்து ஆற்றி வருகிறார். கலைஞரின் நூற்றாண்டு விழா துவக்கமாக அரசு சார்பில் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை, மதுரையில் மிகப்பெரிய நூலகம், அழகிய கலை நயத்துடன் கூடிய மணிமண்டபம் என்று பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளுடன் ஆண்டு முழுவதும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

10 ஆயிரம் கோடிகளை சம்பாதித்துள்ளதாக என் மீது அவதூறு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் நான் கொடுத்த சொத்து பட்டியல் குறித்த தகவல்கள் அனைத்தும் வெப்சைட்டிலும் உள்ளது. இதை பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளலாம். கூடுதலாக ஒரு சென்ட் இடம்கூட என்னிடம் இல்லை. தில்லு இருந்தால் நேரடியாக களத்தில் சந்திக்கவேண்டும். தொடர்ந்து இதுபோன்ற அவதூறு பரப்பிவரும் அண்ணாமலை மீது வழக்கு தொடுக்கப்படும்.

அண்ணாமலை என்னை பற்றி தகவல் வெளியிட்டதற்கு, விளக்கம் கேட்டு முதலில் 48 மணி நேரம் கெடு கொடுத்து நோட்டீஸ் வழங்கினோம். ஆனால் அவரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே வரும் 8ம் தேதி அவர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முதலில் கிரிமினல் வழக்கும், அதைத்தொடர்ந்து சிவில் வழக்கும் தொடுக்க உள்ளேன். அவதூறு செய்தியில் 21 நிறுவனங்கள் எனக்கு சொந்தமானது என கூறியுள்ளார். அதில், 3 நிறுவனங்களில் மட்டுமேதான் ஷேர்கள் வாங்கியுள்ளேன். வேறு எந்த கம்பெனியிலும் நான் தலைமை பொறுப்பு உள்ளிட்ட எந்த முக்கிய பொறுப்பும் வகிக்கவில்லை.

எனக்கும் அந்த நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வெப்சைட் தகவல்களை வைத்துகொண்டு வேண்டுமென்றே வன்மத்துடன் இதுபோன்று அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளார். ஆனால் நான் எப்போதும் திறந்த புத்தகமாகவே உள்ளேன். என் மீது சேற்றைவாரி இறைத்துள்ளார். பெரிய அரசியல் பிரமுகர் இல்லை என்றாலும் அவர் சார்ந்த பாஜக கட்சி தேசிய கட்சி என்பதால், அவர் கூறியதற்கு நான் மக்கள் முன்பாக விளக்கமளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

nineteen + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi