சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் வேறொரு பெண்ணை ராஷ்மிகாவை போல் காட்டினர். இதே போல் நடிகைகள் கத்ரினா கைப், கஜோல் போன்றோரின் போலி வீடியோக்களும் வெளியானது. இதையடுத்து,செயற்கை நுண்ணறிவு, டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் உருவாகும் போலி வீடியோக்கள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், சமூக ஊடக தளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் பணிபுரிவோர்களை ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேற்று சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசினார். அதன் பின்னர், அவர் கூறுகையில்,‘‘ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக டீப் ஃபேக்குகள் உருவாகியுள்ளன. டீப் பேக்குகளை எவ்வாறு கண்டறியலாம். டீப் ஃபேக்குகளை இடுகையில் இருந்து மக்களை தடுப்பது எப்படி? பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இதில், அரசு, தொழில்துறை, ஊடகங்கள் இணைந்து செயல்பட வேண்டும். இது போன்ற தொழில்நுட்பத்தை சமாளிக்க புதிய ஒழுங்குமுறை தேவை. இதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும்’’ என்றார். ஒன்றிய அரசும், அமைச்சரும் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்திந்தபோதும், டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகை கஜோல் உடைமாற்றுவது போன்ற போலி வீடியோ உருவாக்கப்பட்டு அது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், டீப் ஃபேக் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.