கடன் பிரச்சினையால் மன உளைச்சல்!: செங்கல்பட்டு அருகே கணவன், மனைவி தற்கொலை.. போலீசார் விசாரணை..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் பகுதியில் கடன் பிரச்சனை காரணமாக கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாலட்சுமி நகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கருத்தோவியன். இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இரண்டு மகன்களுக்கும் திருமணமான நிலையில், கருத்தோவியன் மற்றும் மஞ்சுளா ஆகியோர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் வீட்டு கதவானது நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கருத்தோவியன் தூக்கில் தொங்கிய நிலையிலும், மனைவி மஞ்சுளா மயக்கமடைந்த நிலையிலும் இருந்தனர். இவர்களது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கருத்தோவியன், மஞ்சுளா இருவரும் சேர்ந்து வங்கி, மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் அதிகப்படியான கடன்களை வாங்கியுள்ளனர். கடனை திருப்பி செலுத்த முடியாததால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளனர். இதன் காரணமாக கருத்தோவியன் தூக்கிட்டும், மஞ்சுளா அதிகப்படியான நீரிழிவு மாத்திரைகளை உட்கொண்டும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. கடன் பிரச்சினையால் கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்