புதுடெல்லி: கடனை வசூலிக்கும் போது, கடன் வாங்கியவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்றும், இதுபோன்ற வழக்குகளை உணர்வுப்பூர்வமாக கையாள வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். nமக்களவையில் கேள்வி நேரத்தின்போது, சிறு கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பிச் செலுத்துவது தொடர்பான கேள்வியின்போது குறுக்கிட்டு பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘சில வங்கிகள் கடனை வசூலிப்பதில் இரக்கமின்றி நடந்து கொள்வது தொடர்பாக பல்வேறு புகார்கள் குறித்து கேள்விப்பட்டேன். கடனை திருப்பி வசூலிக்கும் போது, கடன் வாங்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது. இந்த விஷயத்தை மனிதாபிமானத்துடனும் உணர்வுப்பூர்வமாகவும் அணுக வேண்டும் என்று அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது’’ என்று கூறினார்.