Monday, September 9, 2024
Home » இந்திய மீனவர்கள் உயிரிழப்பது இதயத்தை நொறுக்குவதாக உள்ளது: வெளியுறவுத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இந்திய மீனவர்கள் உயிரிழப்பது இதயத்தை நொறுக்குவதாக உள்ளது: வெளியுறவுத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

by Francis

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்குவந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில், மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி (வயது 59) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அத்துடன் உயிரிழந்த மீனவர் மலைச்சாமி அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த மீனவர் மலைச்சாமி அவர்களது உடலை உடனடியாக தாயகம் கொண்டுவரவும், காயமடைந்த மீனவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி, அவர்களைத் தமிழ்நாட்டிற்கு அழைத்துவர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (1-8-2024) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், கடந்த 31-7-2024 அன்று. IND-TN-10-MM-73 என்ற பதிவுவெண் கொண்ட இந்திய மீன்பிடிப் படகின் மீது இலங்கைக் கடற்படையினரின் ரோந்து படகு மோதிய துயர சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த கவலையையும், வேதனையையும் வெளிப்படுத்தியுள்ள முதலமைச்சர், இத்துயர சம்பவத்தில் ஒரு மீனவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர் என்றும், ஒரு மீனவரை காணவில்லை என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற நிகழ்வுகளில் இந்திய மீனவர்கள் உயிரிழப்பது இதயத்தை நொறுக்குவதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் , இச்சம்பவம் மீனவ சமூகத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர் , இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இரண்டு மீனவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இலங்கை அதிகாரிகளின் வசம் இந்த இரண்டு மீனவர்களும் உள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்கிடவும், போதிய மருத்துவ வசதிகளையும் வழங்கிடவும் கேட்டுக் கொண்டுள்ளதோடு, அவர்களை மிக விரைவில் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நமது பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி மேற்கொள்ளும் இதுபோன்ற அத்துமீறல்கள், மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் , நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் தமிழ்நாட்டின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் உள்ளதாகவும், இதனை கடந்த காலங்களில் பலமுறை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த விஷயத்திற்கு அதிகபட்ச முன்னுரிமை அளித்து, தூதரக நடவடிக்கையின் மூலம் உரிய தீர்வு காணப்படும் என தான் நம்புவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

You may also like

Leave a Comment

13 − thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi