சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் இன்று வெளியிட்ட அறிக்கை:
கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்தது முதல் பாரபட்சமின்றி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தும், பாதிக்கப்பட்டவர்களின் எதிர்கால வாழ்க்கையை கவனத்தில் கொண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவது அவரது தொடர் நடவடிக்கையின் மூலம் தெரியும். சட்டசபையில் விவாதிக்க அழைத்தும் வராத எடப்பாடி பழனிசாமி, மரணத்திலும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த போது, ஊடகத்தில் செய்தியை பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன் என்றவர் தான் இந்த பழனிசாமி. ஆனால், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து மக்களின் நன்மதிப்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது போன்ற சூழலில் அரசுக்கு பக்கபலமாக நின்று, சரியான ஆலோசனைகளை வழங்க வேண்டியது பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் பணி.
அதேசமயம், செல்வப்பெருந்தகை கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, தந்தையை, பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை காங்கிரஸ் ஏற்கும் என்று அறிவித்திருக்கிறார். இதுதான் சிறந்த ஆளுமை கொண்ட அரசியல் தலைவருக்கான லட்சணம். ஆனால், எழவு வீட்டில் கிடைத்த வரை லாபம் என்ற பழமொழி போல், எடப்பாடி பழனிசாமி கேவலமாக அரசியல் செய்கிறார். பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் சந்தித்து காங்கிரஸ் எஸ்.சி.,எஸ்.டி., பிரிவு சார்பாக எங்களால் இயன்ற உதவிகளை வழங்க இருக்கிறோம். எனவே, இந்த இக்கட்டான சூழலில் முதல்வர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.