நன்றி குங்குமம் தோழி
‘‘இறந்த பறவைகளை ஆய்வு செய்வதால் என்ன கிடைக்கப் போகிறது என கேட்கலாம். அமெரிக்காவை சேர்ந்த ரேய்ச்சல் கார்சன் என்ற பெண்மணி ‘மெளன வசந்தம்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார். அந்த புத்தகத்தில் அமெரிக்காவில் புகழ் பெற்ற ராபின் என்ற பறவை அழிந்து போனது பற்றிய குறிப்பு இருந்தது. அதற்கான காரணத்தை அவரே பதிவிட்டிருந்தார். இங்கிலாந்து நாட்டின் சாலையோர மரங்களின் இலைகளை வண்டுகள் தின்று அழித்தன.
வண்டுகளை அழிக்க ஹெலிகாப்டர் மூலம் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. வண்டுகள் இறந்தது. ஆனால் நச்சு தன்மை படிந்த இலைகள் உதிர்ந்து மண்ணுக்குள் புதைந்தது. அதை சாப்பிட்ட புழுக்கள் மாண்டன. கால நிலைக்கேற்ப வலசை பாதையாக இங்கிலாந்திற்கு சென்ற ராபின் பறவைகள் அந்த மண் புழுக்களை தின்று அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது. பூச்சிக்கொல்லிகளால்தான் பறவைகள் இறந்தது என்பதை ரேய்ச்சல் கார்சன் தனது புத்தகத்தில் பதிவு செய்யவே அந்த வகை பூச்சிக் கொல்லிகளையே அமெரிக்கா தடை செய்தது. காரணம், பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதால் பறவைகள் மட்டுமின்றி மனிதர்களும் பாதிக்கப்பட்டனர். பறவைகளை ஒரு நோய் தாக்கும் போது, அதன் பாதிப்பு மக்களுக்கும் ஏற்படும்.
கால சூழ்நிலைக்கேற்ப ஒவ்வொரு நாடுகளுக்கு பறவைகள் இடம் பெயரும். இதை வலசை எனச் சொல்லுவார்கள். தீடீரென பறவைகள் வலசை போகவில்லை. வழக்கமாக வலசை வரும் மாதங்களில் வராமல் முன்கூட்டியே வந்தது அல்லது காலம் தாழ்த்தி வந்தது. இதற்கான காரணத்தை ஆய்வு செய்யும் போது இப்போது நாமெல்லாம் பேசுகிற கால நிலை மாற்றம் என்ற ஒன்று நடந்திருப்பதையே விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். பறவைகள்தான் இயற்கையின் எச்சரிக்கை மணி. இதே போலதான் இறந்த பறவைகளை தேடி சென்ற அந்த பறவைகள் இறந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்து வருகிறார் பொள்ளாச்சியை சேர்ந்த கிருபா நந்தினி.
‘‘சொந்த ஊர் பொள்ளாச்சியில் ஒரு கிராமம். பள்ளிக்கூடம் படிக்கும் போதே என் சித்தப்பா ஏதாவது பெருசா சாதிக்கணும், குறிப்பா மக்களுக்காக வேலை செய்யணும்னு சொல்லுவார். அதனை எனக்கு புத்தகங்கள் மூலம் அறிமுகப்படுத்தினார். சமூக பிரச்சனைகள் சார்ந்து அந்த கால கட்டங்களிலேயே படிக்க தொடங்கினேன். நான் படித்த புத்தகங்கள் சவாலான துறைகளை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது. பள்ளி காலங்களிலேயே அறிவியல் பாடம் மேல் தனிப்பட்ட ஈர்ப்பு எனக்கு இருந்தது. என்னுடைய ஆர்வத்தைப் பார்த்த சித்தப்பா, ‘நீ படிக்கும் அறிவியல் பாடம், வேறு ஒருவர் கண்டுபிடித்தது. நீ ஏதாவது புதுசா கண்டுபிடி’ன்னு சொல்வார். அந்த வார்த்தைகள் எனக்குள்ள ஒரு உத்வேகத்தை கொடுத்தது.
விலங்கியல் துறையை தேர்ந்தெடுத்து படிச்சேன். கல்லுரி படிப்பை முடிச்ச கையோடு, உயிரினங்கள் சார்ந்து ஆய்வு செய்ய முனைந்த போது, ஆனைக்கட்டியில் சாலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் இருப்பது தெரிய வந்தது. அங்கே ஆய்வுகள் செய்து கொண்டே முனைவர் பட்டத்துக்கான படிப்பையும் படித்துக் கொள்ளலாம் என்கிற முறை இருந்தது. ஆய்வுக்கு தேர்வானாலும் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளராக தேர்வாவது கடினம். அங்க படிக்கிறதுக்காக இரண்டு வருடம் என்னை தயார்படுத்திக் கொண்டேன். பல கட்ட தேர்வுகளுக்கு பிறகு எனக்கு அங்க படிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கே இருந்த மூத்த விஞ்ஞானி முனைவர் முரளிதரன் அவர்களிடம் முனைவர் பட்டத்திற்கான பதிவு செய்தேன்.
என்னுடைய ஆய்விற்காக இந்திய அரசின் சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் கீழ் நிதி கிடைத்தது. மேலும் இந்தியாவில் கொத்து கொத்தாக பறவைகள் எங்கெல்லாம் இறக்கிறதோ அங்கு சென்று இறப்பிற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். நான் அந்த ஆய்வில் என்னை இணைத்துக் கொண்டேன். இந்தியா முழுவதும் பறவைகள் இறக்கிறது. ஆனால் பறவைகள் இறந்ததற்கான தகவல்கள் இல்லை. அதிகமாக எங்கே பறவைகள் இறந்து போகும் மாநிலங்களை கணக்கெடுத்தேன். அதில் தமிழ்நாடு, கேரளா, குஜராத், அசாம் இந்த நான்கு மாநிலங்களில் அதிக அளவு பறவைகள் இறப்பது குறித்து தெரிய வந்தது. இந்த நான்கு மாநிலங்களை ஆய்வுக்கான இடங்களா முடிவு செய்தோம்’’ என்றவர் பறவைகளை பற்றி பேசத் தொடங்கினார்.
‘‘உயிரோட இருக்கிற பறவைகளை ஆய்வு செய்தால் எந்த பறவைகள் அழியும் தருவாயில் இருக்குன்னு சொல்லலாம். இறந்த பறவைகளை ஆய்வு செய்தா என்ன கிடைக்கும்ன்னு கேள்வி எழும். சுற்றுச்சூழல் மாற்றத்தினால், புதுப்புது நோய்களின் பாதிப்பு ஏற்படுகிறது. அந்த நோய்கள் குறித்து பறவைகள் நமக்கு முன்கூட்டியே தெரிவிக்கும். காரணம், பறவைளை தாக்கும் நோய்கள் மனிதர்களையும் பாதிக்கும். இந்த உலகத்தில் மனிதர்களை விட பூச்சிகளின் எண்ணிக்கை அதிகம். இவை அதிகரித்தால் நம் உணவுகளை பூச்சிகள் சாப்பிட்டுவிடும். இவை பெருகாமல் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது பறவைகள்தான். பறவைகளில் பல வகை உள்ளன.
புழு பூச்சியுண்ணிகள், பழ உண்ணிகள், தேன் உறிஞ்சிகள், இறந்த உடல்களை சாப்பிடும் கழுகுகள், மீன் உண்ணும் பறவைகள், வேட்டையாடி சாப்பிடும் பறவைகள் என உயிரினங்களை உண்ணக்கூடிய பறவைகள் இருக்கின்றன. ஒரு பறவை எங்கிருந்தோ பழத்தை கொண்டு வந்து சாப்பிடும். அந்த பழத்தில் இருந்து விழும் கொட்டைகள் மரமாகும். காடுகளை உருவாக்க பறவைகளுக்கும் முக்கிய பங்குள்ளது. விவசாயிகளுக்கு பெரிய பிரச்னையாக இருக்கும் எலிகளை கூட ஆந்தைகள் வேட்டையாடி சாப்பிடும். இதுபோல் நம் சூழலை துப்புரப்படுத்தி,
கட்டுப்பாட்டுக்குள்ள வைத்திருப்பது பறவைகள்தான்.
பறவைகள் பற்றி ஆய்வு செய்த போதுதான் அதன் குணாதிசயங்களை பற்றி தெரிந்து கொண்டேன். அதன் பிறகு அவைகள் மேல் தனிப்பட்ட ஆர்வம் ஏற்பட்டது. இறந்த பறவைகள் மட்டுமில்லாமல் வலசை வரும் பறவைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஆரம்பித்தேன். ேநாய்களால் மட்டுமில்லை மனிதர்களாலும் பல பறவைகள் இறக்கின்றன. குஜராத்தில் உத்தராயன் என்று ஒரு பண்டிகை கொண்டாடுவார்கள். அப்போது பட்டம் விடுவது வழக்கம். பட்டம் விடும் மாஞ்சா நூலில் அடிபட்டு ஆயிரக்கணக்கில் பறவைகள் வருடா வருடம் இறக்கிறது. சில சமயம் வேறு விபத்தினால் இறக்கைகள், கால்கள், எலும்புகள் உடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பறவைகளை நான் பார்த்திருக்கேன். எலும்புகளில் அடிபட்டால், அவைகளால் பறக்க முடியாது. கடைசி வரை கூண்டுகளில்தான் இருக்க வேண்டும்.
மனிதர்களால் மட்டுமில்லாமல் காற்று மாசு, ஒலி, ஒளி என பல வகைகளில் பறவைகள் பாதிப்படைகின்றன. இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பறவைகளின் குஞ்சுகளுக்கும் அந்த பாதிப்பினை பார்க்க முடியும். அதில் அதிகமா பாதிக்கப்படும் பறவை மயில். விவசாயிகள் பூச்சிக் கொல்லிகளை வச்சு மயில்களை கொல்வது, பல ஊர்களில் நடக்கும் பிரச்னையாக இன்றும் உள்ளது. பூச்சிக்கொல்லியால் இறந்து போன ஒரு பறவையோட உடலை ஆய்வு செய்யும் போது அதனுடைய உடலில எந்த ஒரு மாற்றமும் தெரியாது. எல்லா உறுப்புகளும் நல்ல நிலையில தான் இருக்கும். ஆனா பறவை ரத்த வாந்தி எடுத்து இறந்திருக்கும். அதை வைத்தும் ஒரு முடிவுக்கு வர முடியாது.
அதனால பறவையோட உடலை லேப்பில் வைத்து ஆய்வு செய்தால் மட்டுமே இறந்ததற்கான காரணத்தை கண்டறிய முடியும். சில சமயங்களில் பறவையின் உடல் கிடைக்காது. வனத்துறையினர் இறந்த பறவையின் சாம்பில்களை கொடுப்பாங்க. அதை வைத்து ஆய்வு செய்வோம். மனிதனுடைய தவறுகளால் மட்டுமில்லாமல், நோய்களாலும் பறவைகள் இறந்து போகிறது. ராஜஸ்தானில் பறவைகளுக்கு வந்த ஒரு நோயினால் 20,000 பறவைகள் இறந்தது.
ஒடிசாவில் உள்ள சிலிக்கான் லேக்கிலும் பல பறவைகள் இறந்து போகிறது. அதற்கு காரணம் காலநிலை மாற்றம். பறவைகளின் வாழ்விடங்கள் மாற்றமடைகிறது. மழைக் காலங்களில் வரும் பூச்சிகள் வருவதில்லை. இதனால் அந்த காலகட்டத்தில் பூச்சிகளை சாப்பிட வரும் பறவைகள் வேறு இடங்களுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் பறவைகள் தங்களை தகவமைத்துக் கொள்ளும் திறனை பெற்றது. பல அழிவுகள் இந்த பூமியில நடந்த பிறகும் கூட பறவைகள் தங்களை தகவமைத்துக் கொள்ள காரணம் அவை இயற்கையுடன் ஒன்றி வாழ்வதுதான். மனிதர்களாகிய நாம் இயற்கையை சுரண்டி வாழ்கிறோம்’’ என்றார் வேதனையோடு கிருபா நந்தினி.
தொகுப்பு: மா.வினோத்குமார்