குளச்சல்: குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் செல்வின் தேவகுமார். இவரது மகள் பெமிஷா (23). எம்.ஏ. பட்டதாரி. இவரும், குமரி மாவட்டம் மேற்கு நெய்யூரை சேர்ந்த ஸ்ரீராம் (24) என்பவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு பெமிஷா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதனால் பெமிஷா, எங்கும் செல்ல முடியாத படி வீட்டில் சிறை வைத்தனர்.
இதற்கிடையே மாப்பிள்ளை பார்க்கும் படலமும் முடிவடைந்து, நாளை மறுதினம் (8ம்தேதி) பெமிஷாவுக்கு, வேறொருவருடன் திருமணம் நடக்க இருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறம் உள்ள சுவர் ஏறி குதித்து தப்பிய பெமிஷா, தனது காதலன் ஸ்ரீராமுடன் குளச்சல் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அங்கு வந்த இரு தரப்பு பெற்றோரிடம் இருவரும் சட்டப்படி மேஜர் என்பதால், தங்களால் எதுவும் செய்ய முடியாது என கூறி போலீசார், காதல் ஜோடியிடம் முறைப்படி பதிவு திருமணம் செய்யுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.