குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனச்சரகத்தையொட்டி, மாநில எல்லையில் அமைந்துள்ள மோர்தானா அணை பகுதியில் நேற்று கடும் துர்நாற்றம் வீசியது. தகவலறிந்த குடியாத்தம் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, சுமார் ஒன்றரை வயதுடைய ஆண் யானை சேற்றில் சிக்கிய நிலையில் இறந்து கிடந்தது. இதையடுத்து, குடியாத்தம் கால்நடைமருத்துவ குழுவினர் அங்கு சென்று பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், யானையின் உடல் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில், ‘அணையில் தண்ணீர் குடிக்க வந்தபோது, சேற்றில் சிக்கி யானை இறந்திருக்கலாம். அல்லது யானைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டபோது யானை சேற்றில் சிக்கி இருக்கலாம்’ என்றனர்.