தஞ்சாவூர்: தஞ்சாவூர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கருணாகரன். இவர் சில மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே உள்ள மதுபான கடையில் சயனைடு கலந்த மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார்.இச்சம்பவம் தொடர்பாக நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களிடம் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த ஒரு நகைக்கடைக்காரரிடம், ‘நான் உங்களை விசாரணைக்கு அழைத்து தொந்தரவு செய்யக்கூடாது என்றால் எனக்கு நீங்கள் ரூ.50,000 லஞ்சம் கொடுக்க வேண்டும்’ என கூறியிருக்கிறார். இதையடுத்து அந்த கடைக்காரர் இன்ஸ்பெக்டரிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். இது குறித்து எஸ்பி ஆஷிஷ் ராவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதையடுத்து கருணாகரன் தஞ்சாவூர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.