Sunday, September 29, 2024
Home » கரன்சியை வாரி இறைத்தும் காலை வாரிய கட்சியினரை நினைத்து கடுப்பில் இருக்கும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கரன்சியை வாரி இறைத்தும் காலை வாரிய கட்சியினரை நினைத்து கடுப்பில் இருக்கும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Neethimaan

‘‘கரன்சியை மட்டும் வாங்கிக் கொண்டு மாநாட்டுக்கு வராமல் வைத்தியமானவருக்கே… வைத்தியம் பார்த்த இலை கட்சியினரை பற்றி சொல்லுங்களேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைகட்சியில் தேனிக்காரர் கரன்சிகளை கொட்டி, தமிழகத்தின் மையப்பகுதியான மலைக்கோட்டை மாநகரில் கிராண்டாக மாநாடு நடத்தினாரு. மாநாடு பந்தல், டெக்கரேஷன் ஆகியவை பிரமாண்டமாகவே இருந்ததாம். இதை பார்த்த தேனிக்காரர் அரங்க வேலைப்பாடு சூப்பரா இருக்கு. கட்சிக்காரங்க வந்து உட்கார்ந்தால் எப்படி இருக்கும். இதுபோல ஒரு பிரமாண்ட மாநாடு தமிழகத்தில் நடந்ததே இல்லை என்று பலரும் பேசுவார்கள். இதை தொடர்ந்து நாம் விரிக்கும் வலையில் பெரிய பெரிய மீன்கள் சிக்கும்… இந்த மாநாடு சூப்பராக இருக்கும் என்று நினைத்தபடி மாநாட்டுக்கு முதல் நாள் ரூமில் போய் ஆனந்தமாக தூங்கினாராம். அவரின் கனவை உண்மையாக்க வேண்டும் என்ற நினைப்பில், டெல்டா மாவட்டம் மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களில் இருந்தும் ப வைட்டமின் கொடுத்து பிரமாண்ட கூட்டத்தை சேலம்காரருக்கு காட்ட வேண்டும். இதற்காக தொண்டர்களை அழைத்து வரும் பொறுப்பை பல பிரிவாக பிரித்து அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களிடம் தேனிக்காரர் ஒப்படைத்தார். கூட கரன்சி கட்டுகளும் நிறைய இருந்ததாம். அதில், டெல்டா மாவட்ட கட்சியினர் கூட்டத்தை பெரிய அளவில் காட்ட வேண்டும் என்ற பொறுப்பை மாஜி அமைச்சர் வைத்தியானவரிடம் தேனிக்காரர் கொடுத்தாராம். அத்துடன் கை கொள்ள முடியாத அளவுக்கு கரன்சி பைகளையும் ெகாடுத்தாராம். சேலம்காரருக்கு அதிர்ச்சி கொடுப்பதோடு டெல்டா மாவட்டத்தில் தனது பலத்தை நிரூபிக்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்த வைத்தியானவர், அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களிடம் அதிக அளவில் தொண்டர்களை அழைத்து வரவேண்டும் என பெட்டி பெட்டியாக ‘வைட்டமின் ப’ கொடுத்து அனுப்பினாராம். மலைக்கோட்டை, சின்ன மாவட்டம், டெக்ஸ்டைல்ஸ், மன்னர், சிமென்ட் மாவட்டம் உட்பட டெல்டா மாவட்டம் முழுவதும் இருந்து எதிர்பார்த்த அளவில் கட்சியினரே வரவில்லையாம். ஒரு பெரிய நோட்டு மற்றும் இத்தியாதிகள் கொடுக்கிறோம் என்று கூறி திருச்சிக்கு அழைத்தார்களாம். வயலுக்கு போனா நாலு காசு கிடைக்கும்… உடலும் ஆரோக்கியமாக இருக்கும்… இப்போது நாலு குரூப்பாக இருப்பதால் நாங்கள் யாரையும் பகைத்து கொள்ள முடியாது. யார் கைக்கு கட்சி வருகிறதோ, அவங்க பக்கம் நாங்க வர்றோம். முதல்ல நீங்க ஒன்றாக சேருங்க… அப்புறம் நாங்க ஒன்றாக சேர்ந்து லாரி அல்லது பஸ் பிடிச்சு மாநாட்டுக்கு வர்றோம். கரன்சியும் வேண்டாம்… சரக்கும் வேண்டாம் என்று தொண்டர்கள் பகிரங்கமாகவே சொன்னாங்களாம். இன்னும் சிலர் கரன்சியை வாங்கிக் கொண்டு வீட்டில் இருந்து ‘எஸ்’ ஆயிட்டாங்களாம். இந்த தகவல் வைத்தியானவர் காதுக்கும் போனதும் அவர் டென்ஷன் ஆயிட்டாராம். ‘வைட்டமின் ப’ கொடுத்தும் குறைவான தொண்டர்கள் கலந்து கொண்டது ஏன் என்பது குறித்து தனது மாவட்ட ஆதரவாளர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்தாராம். இதில் அவர்கள் அளித்த பதிலில் திருப்தியே இல்லையாம். கரன்சியை வாங்கி கொண்டு வராதவர்கள், கரன்சி வாங்கிக் கொண்டு கும்பலை கூட்டாதவர்கள் மீது வைத்தி கடும் கோபத்தில் இருக்கிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஆட்சி மாறினாலும் சில அதிகாரிகளின் மனதில் இருந்து பழைய காட்சிகள் மாறவே இல்லைனு சொல்றாங்களே, அது என்ன…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி கார்ப்பரேஷனில் இன்னும் இலைகட்சி ஆட்சி நடப்பதாக நினைச்சுகிட்டு வேலை பாக்கும் ஆபீசருங்க நிறைய பேர் இருக்காங்களாம். பத்து வருஷத்துக்கு மேலாக முக்கிய சீட்டுகளில் இருக்கும் அவர்கள், எந்த நேரத்தில் வேலைக்கு வருகிறார்கள், எப்போது ஆபிசுக்கு திரும்பி செல்கிறார்கள் என்ற விஷயம் மர்மமாகவே இருக்காம். அதிகாரிங்க வருவாங்க, நம்ம வேலையை முடித்து தருவாங்கனு மணிக்கணக்கில் கார்ப்பரேஷனில் காத்திருக்காங்களாம்… ஆனால் கடைசிவரை அந்த அதிகாரி வருவதே இல்லையாம். இவர்களை போன்றவர்களால், அரசு மீது அதிருப்தியே மிஞ்சுகிறது. உண்மையில் இவர்கள் அதிகாரிகளாக இல்லாமல், இலைகட்சியின் அதிதீவிர விசுவாசிகளாக இருப்பது தான், இதற்கு முக்கிய காரணமாம். இப்படி தான் அப்பாவி பொதுமக்கள் மத்தியில் பேச்சு ஓடுது. இவர்களை யாராவது கேள்வி கேட்டால், இலைகட்சிகாரங்க, யாருடா அதிகாரியை எதிர்த்து பேசுறது என்று குரல் கொடுக்குறாங்க. இதனால் இலைமறைவு, காய்மறைவாக இருந்த தொடர்புகளும் அம்பலமாகி வருதாம். இலை ஆதரவு அதிகாரிகள் யாரும் யாருக்கும் பயப்படுவது இல்லையாம்… இதை ஒரு முடிவுக்கு கொண்டு வர அலுவலக உயரதிகாரி முடிவு செய்து இருக்காராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஒரு கையெழுத்து போட பல நூறுகளை வாங்குறது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர்ல மெடிக்கல் காலேஜ் இருக்கு. இங்க இலவச பஸ்பாஸ், ரயில் பாஸ் வாங்க மருத்துவ சான்றிதழ் கேட்டு மாற்றுத்திறனாளிகள் வர்றாங்க. அங்கு பணிபுரியுற சில டாக்டர்ஸ் ‘ப’ வைட்டமின் கொடுத்தால் ஒன்றுக்கு மூன்று கையெழுத்து போடறாங்களாம். இல்லையென்றால் பல மணி நேரம் காக்க வெச்சி அலையவிடுறாங்க. கடைசியில, ப வைட்டமின் கைக்கு வந்த பிறகுதான், கையெழுத்து போட்டு அனுப்புறங்க. அதுவும் மினிமம் ஒரு மணி நேரம் வெயிட் செஞ்சாத்தான் சான்று கிடைக்கும்னு புகார் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கு. இப்படி பல்வேறு சம்பவங்கள் வெயிலூர் மெடிக்கல் காலேஜ்ல அரங்கேறி வருது. இதனை தடுக்க அதிகாரிங்க ரகசிய ஆய்வு செய்து, சைன் போடுறதுக்கு சம்திங் கேட்குறவங்க மேல நடவடிக்கை எடுக்க வேண்டும்னு கோரிக்கை எழுந்திருக்கு. ஏற்கனவே கலெக்டர் ஆபிசுல நடந்த கூட்டத்துல இதுதொடர்பாக டிஆர்ஓவிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரை கேட்டு அதிகாரிகளே அதிர்ச்சியடைஞ்சிருக்காங்க. பொதுமக்களுக்காக அனைத்து வசதிகளும், சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்பதில் அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும்னு மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் அதிகளவு சம்பளம் வாங்கும் டாக்டர்களில் சிலர் பொதுமக்களிடம் பணம் கேட்பது நியாயமற்றது. எனவே சம்பந்தப்பட்ட டாக்டர்களுக்கு நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்னு டிஆர்ஓ எச்சரித்து இருந்தார். அதையெல்லாம் காதுல வாங்காம ஒரு கையில கையெழுத்து மறு பக்கம் கரன்சி என்று வேலூர் மாவட்டத்துல கலக்கி வர்றாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

four × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi