சாயல்குடி, ஏப்.19: கடலாடி அருகே ஆளில்லா வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கடலாடி, முதுகுளத்தூர் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்.ஐ சிவஞானபாண்டியன், ஏட்டு குமாரசாமி ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சவேரியார்பட்டிணத்தில் ஒரு வீட்டில் சோதனையிட்டதில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதில் 40 கிலோ எடையளவு கொண்ட 17 மூட்டைகள் இருந்தது. இதனை யார் சேகரித்து பதுக்கி வைத்தது என தெரியாததால் மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகளை அரசு நுகர்பொருள் வாணிப கிட்டங்கில் ஒப்படைக்கப்பட்டது.