கடலூர்: கடலூர் திரிபாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட்டில் பட்டப்பகலில் இரும்பு பொருட்களை திருடிய பாஜக கவுன்சிலர் உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திரிபாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட்டில் ஏராளமான காய்கறி மற்றும் மளிகை கடைகள் உள்ளன. இது மிகவும் பழமையான மார்க்கெட் என்பதால் இங்குள்ள கடைகளை இடித்துவிட்டு புதிதாக கடைகள் கட்ட கடலூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. எனவே தற்போது அங்குள்ள கடைகள் இடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மார்க்கெட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு பொருட்களை கடலூர் மாநகராட்சி 28வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் சக்திவேல் உள்ளிட்ட 10 பேர் பட்டப்பகலில் திருடியதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கடலூர் செம்மண்டலம் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ராம்குமார் என்பவர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார், பாஜக கவுன்சிலர் சக்திவேல் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.