கடலூர் :கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராமிடம் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் டாக்டர் திருநாவுக்கரசு(73) கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது : கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வசித்து வருகிறேன். அரசு மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்று வீட்டில் இருந்த நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் டாக்டராக பணியாற்ற பணியிடம் காலியாக உள்ளதாகவும் அதில் பணியாற்ற அழைப்பு விடுக்கும் வகையில் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் பிந்து என்பவர் தொடர்பு கொண்டார்.
மேலும் மருத்துவராக பணியாற்ற என்னுடைய ஆதார் கார்டு, மருத்துவ படிப்பு சான்று உள்ளிட்ட சான்றுகளை அனுப்பி வைக்குமாறு கூறியிருந்தார். பணி தொடர்பாக சான்றுகளை அனுப்பிய நிலையில் கார்த்திக் பிந்து எனது சான்றை வைத்து கடந்த 2020 ஆம் ஆண்டு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூபாய் 14,55,000 கடன் பெற்றுள்ளார் .இது போன்று நூதன முறையில் மோசடியாக என்னுடைய சான்றை வைத்து கடன் பெற்ற நிலையில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தினர் கார்த்திக் பிந்து கடன் தொகையை செலுத்தாத நிலையில் என்னை தொடர்பு கொண்டனர்.
இதன் மூலம் எனது சான்றுகள் வைத்து கடன் பெற்று மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. எனவே சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதை அடுத்து எஸ் பி ராஜாராம் உத்தரவின் பெயரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை புழலை சேர்ந்த கார்த்திக் பிந்து (43 )என்பவரை கைது செய்து கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீசாரின் தீவிர விசாரணையில் சென்னையை சேர்ந்த வாலிபர் கார்த்திக் பிந்து இதுபோன்று நூதன முறையில் மோசடியில் ஏற்கனவே ஈடுபட்டு மாதவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது . கடலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.