கடலூர்: கடலூரில் மகளிர் உரிமைத் தொகை பதிவு செய்யும் முகாம்களில் சர்வர் முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தமிழக அரசு சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு, தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான விண்ணப்ப படிவங்கள் நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்பட்டு, அதனை முகாமில் குடும்பப் பெண்கள் ஆதார் அட்டை உள்ளிட்ட நகல்களுடன் விண்ணப்ப பாரங்களை பூர்த்தி செய்து, அங்குள்ள முகாமில் கணினி மூலம் பதிவேற்றம் நடைபெற்று வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட முகாம்கள், மொத்தம் 3 கட்டமாக நடைபெறும் என்றும், முதற்கட்டமாக 35,925 முகாம்கள் நடைபெறுவதாகவும், இதன்மூலம் ஏறத்தாழ 50 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரே நேரத்தில் பல பெண்கள் கூடியதால், கடலூரில் மகளிர் உரிமைத் தொகை பதிவு செய்யும் முகாம்களில் சர்வர் முடங்கியது.
இதனால் கைரேகை வைத்து பதிவு செய்யும் முறை முற்றிலும் இயங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வர் முடங்கியதால் கடலூர் மாவட்டம் முழுவதும் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான விண்ணப்ப படிவங்களை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சாதாரணமாக பதிவு செய்வதால் ஒவ்வொரு நபருக்கும் அரை மணி நேரம் வரை ஆகிறது என்று கூறப்படுகிறது.