கடலூர் முதுநகர் அருகே பரிதாபம் கார் மீது லாரி மோதி சிறுவன் பலி-புதுவையை சேர்ந்த 6 பேர் படுகாயம்

கடலூர் : கடலூர் முதுநகர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். படுகாயம் அடைந்த 6 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் முருங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மாயக்கண்ணன் (47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சீதாலட்சுமி (38). இவர்களது மகன்கள் அறிவுக்கரசு (12), அன்புக்கரசு (8). மாயக்கண்ணன் தனது குடும்பத்தினர் மற்றும் தனது தங்கை மகளான நிரஜா (15), மற்றொரு தங்கை மகனான ரவீந்தர் (15), அண்ணன் மகன் ஜெய்கணேஷ் (14)ஆகியோருடன் காரில் புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்துக்கு சென்று அங்கு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

பின்னர் மாலை அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். கடலூர் முதுநகர் அருகே உள்ள சிப்காட் தீயணைப்பு நிலையம் அருகே வந்தபோது, எதிரே சிதம்பரம் நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அன்புக்கரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மாயக்கண்ணன், சீதாலட்சுமி உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அன்புகரசுவின் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த 6 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிச்சாவரத்துக்கு சுற்றுலா சென்று வந்த போது விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

உதகையில் கோடை சீசன் நிறைவடைந்ததை அடுத்து சினிமா படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.!!

தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் அண்ணாமலை?

எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்ல.. நேரடியாக கடவுளுடன் உரையாற்றுபவர் மோடி: சிவப்பெருமான் படத்தைக் காட்டி ராகுல் காந்தி பேச்சு