கோயில்களில் உள்ள புராதன சிலைகள் சேதம், நிதி விவகாரங்கள் தொடர்பாக தேவைப்படும் நேரங்களில் அரசின் அனுமதியைப் பெற்று மத்திய கணக்குத் தணிக்கை குழுவை கொண்டு தணிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோயில்கள் சொத்து குறித்து அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள், கடந்த 2021 ஜூன் முதல் இதுவரை 351 கோயில்களில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். ஆய்வுக்காக அமைக்கப்பட்டுள்ள நான்கு பறக்கும் படைகளும், இதுவரை 179 கோயில்களில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளன. கோயில்கள் சீரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கோயில்கள் பராமரிப்புக்கும், விழாக்களுக்கும், ஊழியர்கள் ஊதியம் வழங்குவதற்கும் கோயில் நிதி பயன்படுத்தப்படுகிறது. உபரி நிதி, நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயன்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 13 ஆயிரம் கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு மானியம், ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்து. 2023-24ம் ஆண்டில் கூடுதலாக 2 ஆயிரம் கோயில்கள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.
தற்போது 17 ஆயிரம் கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஜனவரி முதல் 2024 ஜனவரி வரை கோயில்கள் திருப்பணிக்காக அரசு மானியமாக 101 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் பராமரிப்புக்காக 2024-25ம் ஆண்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயில் சொத்துகளை தணிக்கை செய்ய தனி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். 17,962 கோயில்களில், நகைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளன. கோயில் நிலங்களை ஆக்கிரமித்த 17,450 பேருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 மே மாதம் முதல் 2024 மார்ச் வரையிலான காலகட்டத்தில் 5 ஆயிரத்து 812 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6,324 ஏக்கர் நிலங்கள், 1,215 கிரவுண்ட் காலிமனை, 137 கிரவுண்ட் கோயில் குளங்கள், 186 கிரவுண்ட் பரப்பில் அமைந்துள்ள கட்டிடங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 1424 சிலைகளில், 273 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
சிலைகளை பாதுகாக்க அமைக்கப்பட்ட 23 மையங்களில் 8,693 சிலைகள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கண்காணிப்பு கேமரா, அலாரம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய உயர் பாதுகாப்பு அறைகள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டு 1,842 அறைகள் கட்ட டெண்டர் கோரப்பட்டு 1,833 அறைகள் கட்டுமானத்துக்காக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 542 அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கோயில் சிலைகள் திருட்டு, சொத்துக்கள் பெயர் மாற்றம் செய்த விவகாரங்களில் தொடர்புடைய அதிகாரிகள் 111 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர, கோயில்களில் ஊழியர்கள் நியமனம், அவர்களுக்கான ஊதியம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பணப் பலன்கள் தொடர்பான விவரங்களும் அறிக்கையில் தரப்பட்டுள்ளது.