காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு, துறைச்சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். நேற்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், அமைக்கப்பட்டிருந்த வேளாண் கண்காட்சியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, கண்காட்சியை பார்வையிட்டார்.
தொடர்ந்து, 15 விவசாய பயனாளிகளுக்கு வேளாண் பயிர் செடிகள் மற்றும் பசுந்தாள் உர விதைகள் மற்றும் கூட்டுறவு சங்கம் மூலம், 19 விவசாய பயனாளிகளுக்கு 20 லட்சத்து 95 ஆயிரத்து 792 ரூபாய் மதிப்பீட்டில் பயிர் கடன்களும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 3 விவசாய பயனாளிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான பணி ஆணையையும் கலெக்டர் வழங்கினார்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.