Monday, September 9, 2024
Home » நெருக்கடி

நெருக்கடி

by Neethimaan


கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்க நினைத்து போாராட்டங்களை அறிவித்துள்ள பாஜவுக்கு தங்கள் கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தளத்தால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மைசூரு நகர வளர்ச்சி கழகம் சார்பில் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடத்துள்ளதாகவும், அதனால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் குற்றம்சாட்டி பாஜவினர் சட்டசபை உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆளுநரிடம் புகார் மனுவும் கொடுத்துள்ளனர். உடனே, இது குறித்து சித்தராமையா விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். இதனால் கொதிப்படைந்த காங்கிரஸ் கட்சியினர், கேரளா, தமிழகம், மேற்குவங்கம் ஆகிய மாநில ஆளுநர்கள் அரசியல் சாசனத்தை மீறி மாநில அரசுக்கு தொல்லை தருவது போல் கர்நாடக ஆளுநரும் நடந்து கொள்வதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் பாஜ-மஜத கூட்டணி கட்சி சார்பில் கண்டன நடைபயண போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு கட்சிகள் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் ஒன்றிய அமைச்சரும் மஜத மாநில தலைவருமான குமாரசாமியும் கலந்து கொண்டார். மஜத-பாஜ நடைபயணத்துக்கு போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, மதசார்பற்ற ஜனதா தளமும் இந்த நடைபயணத்துக்கு ஆதரவில்லை என்று அறிவித்துள்ளதால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைசூருவில் மதசார்பற்ற ஜனதா தள கட்சிக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. மேலும் குமாரசாமி மண்டியா மக்களவை தொகுதி எம்பியாக இருக்கிறார். ஆனால் பாஜவினர் தனது கூட்டணி கட்சியான மஜதவுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்காமல் தனித்து நடைபயணத்துக்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக அக்கட்சி தொண்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் ஹாசன் மாவட்டத்தில் கோலோச்சி வந்த தேவகவுடா குடும்பத்தின் நற்பெயரை கெடுத்து பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவை வெளியிட்ட பாஜவை சேர்ந்த பிரீதம் கவுடாவை நடைபயண போராட்ட ஆலோசனைக்குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டதை ஒன்றிய அமைச்சர் குமாரசாமியால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. இதனால் கோபமடைந்த அவர், எங்கள் குடும்பத்தை திட்டமிட்டு பழிவாங்கிய பிரீதம் கவுடாைவ என் எதிரே அமரவைத்து ஆலோசனை கூட்டம் நடத்துவதை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். எனவே இந்த போராட்டத்துக்கு மஜத ஆதரவளிக்காது. தேர்தல் சமயத்தில் இருக்கும் கூட்டணி என்பது வேறு. அரசியல் ரீதியான சுயமரியாதை என்பது வேறு என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளதால் கர்நாடக பாஜவினர் கைபிசைந்து நிற்கின்றனர்.

மேலும் காங்கிரசுக்கு எதிரான பாஜவி்ன் நடைபயண போராட்டம் வெற்றி பெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளத்தின் கோரிக்கைகளை ஏற்று பிரதமர் மோடி பணிந்து போக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார், பிரதமர் மோடி. ஏற்கனவே பாஜவுடன் கூட்டணி அமைத்து குமாரசாமி பாதியில் அறுத்துக்கொண்டு வெளியேறிய சம்பவங்களை பாஜவினர் மறந்திருக்கமாட்டார்கள். அந்த காட்சி மீண்டும் அரங்கேர வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

2 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi