குற்றவாளிகள் தப்பக் கூடாது; பெண்களுக்கு எதிரான குற்றம் மன்னிக்க முடியாத பாவம்: பிரதமர் மோடி பேச்சு

ஜல்கான்: ‘பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம். இக்குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் ஒருவர் கூட தப்பக் கூடாது’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை, மும்பை அருகே 4 வயது பள்ளிச் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்களால் நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் நேற்று நடந்த லட்சாதிபதி சகோதரி சம்மேளன நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டில் உள்ள தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முன்னுரிமை. எனது சுதந்திர தின உரையில் இதைப் பற்றி பலமுறை வலியுறுத்தி உள்ளேன். நாட்டின் எந்த மாநிலமானாலும், அங்குள்ள பெண்களின் வலியையும், கோபத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம். ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் மாநில அரசுகளிடமும் கூறுகிறேன், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்கக் கூடாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு துணை போகும் நபர்களும் தண்டிக்கப்பட வேண்டும். அது மருத்துவமனையோ, அரசாங்கமோ, போலீஸ் நிலையமோ எங்கு நடந்தாலும் சரி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நாட்டில் அரசாங்கம் மாறும். ஆனால் மக்களையும் பெண்களையும் பாதுகாப்பது நம் அனைவரின் மிகப்பெரிய பொறுப்பாகும். இந்த செய்தி அரசு நிர்வாகத்தில் மேலிடத்தில் இருந்து கீழே உள்ள ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related posts

காவல்துறையினர் எந்த ரக காக்கி உடையை அணிய வேண்டும் என்பது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை

மதுரையில் தீ விபத்து நடந்த கட்டடத்தை இடிக்கும் பணி தொடக்கம்!

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்.. 2017-2021 வரை திருமண திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்?: ஐகோர்ட் கேள்வி!!