தேனி: தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மிலானி தேனியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவில், ‘‘நடந்து முடிந்துள்ள தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் அமமுக வேட்பாளர் டிடிவி.தினகரன் வேட்புமனு தாக்கலின்போது பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். மேலும் வேட்புமனு சட்டப்பூர்வமானதாக இல்லை. எனவே இவரது மனுவை தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அவர் மீது கிரிமினல் வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
சமூக ஆர்வலர் மிலானி ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் வேட்புமனுவில் பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாக கூறி மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டது. இதில் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு தற்போது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.