எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி 3 புதிய குற்றவியல் சட்டம் அமலானது: பல மாநிலங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்துள்ளன. இதை எதிர்த்து பல மாநிலங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய ஆங்கிலேயர் காலத்து சட்டங்களுக்கு பதிலாக, முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷய அதிநியாம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை கடந்த ஆண்டு டிசம்பரில் ஒன்றிய அரசு கொண்டு வந்தது.

இந்த 3 சட்டங்களுக்கான மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட போது, நாடாளுமன்ற பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக அமளி செய்ததாக 146 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். இதனால், அவையில் ஆளுங்கட்சி எம்பிக்கள் ஆதரவுடன் எந்த விவாதமும் இல்லாமல் 3 புதிய குற்றவியல் சட்டங்களும் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன. இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

மேலும், புதிய குற்றவியல் சட்டங்களில் போலீசாருக்கு அதிக அதிகாரம் வழங்குவது, ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியில் சட்டங்களுக்கு பெயரிடுவது, விவாதமின்றியும், மாநில அரசுகளின் கருத்தை கேட்காமலும் சட்டங்களை கொண்டு வருவது போன்றவற்றை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் இந்த சட்டங்கள் ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. சட்டத்தை அமல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளையும் செய்தது.

இதற்கிடையே இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்டோர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினர். 3 குற்றவியல் சட்டங்கள் குறித்து நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதம் நடத்தி பிறகு முடிவெடுக்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அரசிடம் வலியுறுத்தின. ஆனால் அத்தனை எதிர்ப்பையும் மீறி, திட்டமிட்டபடி புதிய 3 குற்றவியல் சட்டங்களும் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்துள்ளன.

இதன் மூலம், காலனித்துவ கால சட்டங்களுக்கு முடிவு கட்டப்படும் என்றும், புதிய குற்றவியல் சட்டங்கள் இந்திய நெறிமுறையுடன் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக நீதியை உறுதி செய்யும் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே கூறி இருந்தார். இதில், பெண்கள், குழந்தைகளுக்கான குற்றங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவது, குற்றச் செயல்களில் அவர்களை ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. சிறுவர், சிறுமியை விற்பது கொடிய குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் அவரது உறவினர், பாதுகாவாலர் முன்னிலையில், பெண் போலீஸ் அதிகாரியால் வாக்குமூலம் பெறப்பட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இனி காவல்நிலையத்திற்கு நேரில் சென்று புகார் தர வேண்டுமென்ற அவசியமில்லை. மின்னணு ஊடகம் மூலமாக புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகார் செய்தவர் 3 நாட்களுக்குள் காவல் நிலையத்திற்கு சென்று புகாரில் கையெழுத்திட வேண்டும்.

இதே போல, எந்த காவல் நிலையத்திலும் குற்றத்திற்கு எதிராக புகார் பதிவு செய்யவும் வகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் போலீசாரின் எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தவறான திருமண வாக்குறுதியின் கீழ் உடலுறவு கொள்வதும் கடுமையான குற்றமாக்கப்பட்டுள்ளது. பாலியல் விவகாரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மின்னணு வாயிலாக வாக்குமூலம் தரவும் வசதி செய்யப்பட்டுள்ளது. சாட்சிகள், குற்றம்சாட்டப்பட்டவர்கள், நிபுணர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மின்னணு ஊடகம் மூலம் ஆஜராக முடியும்.

போலீஸ் விசாரணை முதல் நீதிமன்ற நடவடிக்கை வரை முழு செயல்முறையும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை உள்ள வழக்குகளில் தடயவியல் விசாரணை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போலீஸ் தேடுதல் செயல்முறை முற்றிலும் வீடியோ பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நவீன நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக சமூகப் பணிகள் தண்டனையின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6 வகையான சிறிய குற்றங்களில் ஈடுபடுவோரை சமூகப் பணிகளில் ஈடுபடுத்த வகை செய்யப்பட்டுள்ளது.

இவற்றை தவிர, தீவிரவாத செயல்களுக்கான வரையறை வழங்கப்பட்டுள்ளது. கும்பல் கொலை தனி பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எப்ஐஆர் பதியாமலேயே விசாரணை நடத்த 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும் அவகாசம் 15 நாட்களுக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டங்களை நடத்துபவர்களை தற்கொலைக்கான முயற்சியாக கருதி சிறையில் அடைக்கும் அம்சங்களும் புதிய குற்றவியல் சட்டங்களில் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்திய தண்டனை சட்டத்தில் இருந்து தொழில்நுட்ப ரீதியாக தேசத் துரோகம் நீக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட நிலையில், இந்த புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. இதில், என்ன மாதிரியான தண்டனை விதிக்கலாம் என்பது குறித்து விரிவான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் போன்ற சிறப்பு சட்டங்களின் ஒரு பகுதியாக இருந்த தீவிரவாத செயல்கள், இப்போது புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மரண தண்டனை கைதிகள் மட்டுமே கருணை மனு தாக்கல் செய்ய முடியும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, அரசு சாரா அமைப்புகள் அல்லது சிவில் சமூகக் குழுக்களும் குற்றவாளிகளின் சார்பாக கருணை மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற மாற்றங்கள் போலீசாருக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதே சமயம், புதிய குற்றவியல் சட்டங்கள் நீதி வழங்குவதில் கவனம் செலுத்துவதாகவும் வெறுமனே தண்டனை வழங்குவதில் மட்டுமல்ல என ஒன்றிய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே, புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டங்களால் தங்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் எனக் கூறி பல மாநிலங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த புதிய சட்டங்கள் நீதித்துறை அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது.

* எத்தனை பிரிவுகள்?
புதிய 3 குற்றவியல் சட்டங்களில் உள்ள பிரிவுகள் பெரும்பாலும் முந்தைய சட்டத்தில் இருந்தவை என்றாலும், சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குற்றத்தின் தன்மை, அதற்கான தண்டனையை வரையறுக்கும் இந்திய தண்டனை சட்டத்தில் 511 பிரிவுகள் இருந்த நிலையில் அவை 358 பிரிவுகளாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளது.

குற்றத்தை வரையறுத்த பிறகு அதற்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தரும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 533 பிரிவுகள் இருந்த நிலையில் இவை பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா சட்டத்தில் 531 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தண்டனையை நிரூபிக்க சாட்சியத்தை கையாளும் வழிமுறைகளை வரையறுக்கும் இந்திய சாட்சியங்கள் சட்டத்தில் 167 பிரிவுகள் இருந்த நிலையில், புதிய பாரதிய சாக்ஷய அதிநியாம் சட்டத்தில் 170 பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு