குடியாத்தம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி பகுதியை சேர்ந்தவர் சிட்டிபாபு (39). எல்லை பாதுகாப்பு படைவீரராக பணியாற்றி வந்தார். ராஜஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு பணி மாறுதல் பெற்று ராணுவ வாகனத்தில் சிட்டிபாபு சென்றுள்ளார். காஷ்மீர் மாநிலம் இமயமலை தொடர்ச்சி பகுதியில் நேற்று முன்தினம் சென்றபோது ஆக்சிஜன் குறைபாடு காரணமாக சிட்டிபாபுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்து இறந்தார். அவரது உடல் சொந்த ஊரான குடியாத்தம் அடுத்த கல்லபாடி கிராமத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.