நம் நாட்டில் மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய திறந்தநிலை பள்ளி (NIOS- National Institute of Open Schooling) பள்ளிக் கல்வியை தொலைநிலை வழியில் பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையில், தேசிய திறந்தநிலை பள்ளி வழங்கும் 10, 12ஆம் வகுப்புச் சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு உகந்ததல்ல என்று பள்ளிக்கல்வித் துறை கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதை ஏற்று தேசிய திறந்தநிலை பள்ளியில் வழங்கப்படும் 10, 12ஆம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்குத் தகுதியானவை என்று பள்ளிக் கல்வித் துறை தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலர் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணையில், மறுபரிசீலனை செய்ததில் தேசிய திறந்தநிலைப் பள்ளியில் 10, 12ஆம் வகுப்பு தேர்வெழுதி பெறப்படும் தேர்ச்சிச் சான்றிதழ்கள், தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வழங்கும் 10, 12ஆம் வகுப்பு சான்றிதழ்களுக்கு இணையானவை என்று ஏற்கப்படுகிறது. தேசிய திறந்தநிலைப் பள்ளி தரும் 10, 12ஆம் வகுப்புச் சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியானவையாகும். உயர்கல்வி, மனிதவள மேலாண்மைத் துறைகளின் ஒப்புதலுடன் இந்த உத்தரவு வெளியிடப்படுகிறது, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.