ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் கடற்கரையை ராமேஸ்வரத்துடன் இணைப்பதற்காக பழைய ரயில்வே பாலம் வலுவிழந்ததால் அதன் அருகில் இரு வழித்தடங்களுடன் புதிய பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், கப்பல் செல்லும்போது வழி விடும் வெர்டிகிள் தூக்குப் பாலத்திற்கான கர்டர்கள் பொருத்தும் பணிகள் மட்டுமே முடிக்க வேண்டியுள்ளது. இதற்காக கடலில் கால்வாய் அமைந்துள்ள மையப்பகுதியில், பாலத்தின் மேல் தூக்குபாலத்திற்கான தாங்கு தூண்கள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர். இரும்பினால் செய்யப்பட்ட தூண் பகுதியை கிரேன் உதவியுடன் தூக்கி பொருத்தும் பணி நடைபெற்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக கிரேனின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த மாரியப்பன், கிறிஸ்டி மற்றும் வடமாநில தொழிலாளர்கள் ஐந்து பேர் என 7 பேர் காயமடைந்தனர். கிரேன் தாக்கியதில் கடலுக்குள் விழுந்த ஊழியர் ஒருவர் உடனடியாக மீட்கப்பட்டார். இதில், பலத்த காயமடைந்த மாரியப்பன் உட்பட 2 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் சக ஊழியர்களிடையே பரபரப்ைப ஏற்படுத்தியது. விபத்து குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.