Monday, October 7, 2024
Home » பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் பலி

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் பலி

by Suresh

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உடல் கருகி பலியாகினர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் சோலை காலனியை சேர்ந்த முருகவேல் (58) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நேற்று காலை 7 மணியளவில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு அறையில் மணி மருந்து கலக்கும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒருவர் மணி மருந்தை வாளியில் எடுத்து வந்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

அந்த அறையில் இருந்த வெள்ளூர் சிதம்பராபுரத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மாரியப்பன் (45), முத்துமுருகன் (45) ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். சித்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரோஜா (50), செவலூரைச் சேர்ந்த சங்கரவேல் (52) ஆகியோர் படுகாயமடைந்தனர்.தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். படுகாயமடைந்த இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து எம்.புதுபட்டி போலீசார் ஆலை உரிமையாளர் முருகவேல், போர்மேன் குணசேகரன் (60), மேனேஜர் பன்னீர்செல்வம் (60) ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிந்து, குணசேகரன், பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

ரூ.3 லட்சம் நிதியுதவி; முதல்வர் அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம், காளையார்குறிச்சி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் பலியான மாரியப்பன், முத்துமுருகன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

14 + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi