திருவொற்றியூர்: மணலி பெரிய தோப்பு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (62) நேற்று முன்தினம் மாலை, தனது நண்பர் ஒருவரை சந்திக்க, வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டார். மணலி நெடுஞ்செழியன் சாலை எஸ்.ஆர்.எப் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே திடீரென ஓடிவந்த எருமை மாடு மீது, பைக் மோதியதால், நிலை தடுமாறிய ஜெயக்குமார், கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.