யூடியூபர் சங்கரை விடுவிக்க கோரிய வழக்கு ஏற்கனவே உள்ள வழக்குகளுக்கு பிறகு வரிசைப்படிதான் விசாரிக்கப்படும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து யூடியூபர் சங்கரின் தாய் தொடர்ந்த வழக்கு வரிசைப்படிதான் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது உயர் நீதிமன்றம். யூடியூபர் சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து வழக்கில் முடிவு காண்பதற்காக இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்ற நீதிபதி பி.பி.பாலாஜி உத்தரவை ஏற்றுக் கொண்டார். அத்துடன் ஆட்கொணர்வு வழக்கை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம் செய்ய நீதிபதி பரிந்துரைத்தார். அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென்று கோரினார். இதையடுத்து, இந்த வழக்கை வழக்கமான நடைமுறையின் படியே, வரிசையாக தான் விசாரிக்கப்படும்.

ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை முடிந்த பின்னரே இந்த மனு இறுதி விசாரணைக்கு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது, இடைக்காலமாக மருத்துவ சிகிச்சைக்காக விடுதலை செய்வதற்கு உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக கொடுத்த விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் நீதிபதிகளிடம் கோரினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், இந்த கோரிக்கை ஏற்க தக்கதல்ல என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரர் ஏற்கனவே கொடுத்த விண்ணப்பம் சிறைத் துறையிடம். அரசிடம் தரவில்லை. எனவே, இடைக்கால நிவாரணம் கோரி அரசிடம் புதிய மனு அளிக்கலாம். அந்த மனுவை 8 வாரங்களில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இடைக்கால நிவாரணம் தரவேண்டும் என்று இந்த நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. சட்டப்படி மனுவை பரிசீலிக்க வேண்டும் என்றுதான் கூறியுள்ளது என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

Related posts

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினாவில் நாளை விமான சாகசம்: போக்குவரத்தில் மாற்றம்: 6500 போலீசார் பாதுகாப்பு

எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு