இதற்கிடையே விடுப்பில் உள்ள 10 பேர் உட்பட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நீண்ட நாள் சிறைவாசிகளான ஷம்மா உள்ளிட்ட இருவரின் விடுப்பை நீடிப்பது தொடர்பான வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர்களின் விடுப்பை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும், சிறைவாசிகள் விடுதலை குறித்த பரிந்துரை ஆளுநர் முன்பு நிலுவையில் உள்ள நிலையில், அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து உயர் நீதிமன்றமே பரிசீலிக்க முடியுமா என்று கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக்கிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அரசிடம் எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை. ஆளுநரிடம் மட்டுமே நிலுவையில் உள்ளது. ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றார். இதையடுத்து, முன்கூட்டி விடுதலை செய்வது குறித்த தீர்ப்புகள் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கின் விவரங்களை தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.