மதுரை: புதுக்கோட்டையைச் சேர்ந்த நடராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,தமிழகத்தின் மாநில மரமாக உள்ள பனைமர தொழில் அழிந்து வருகிறது. கள் இறக்க தடை உள்ளதால் புதுக்கோட்டை பகுதியில் பனைமரத்தை நம்பி உள்ள ஏராளமான விவசாயிகள் வறுமையில் வாடுகின்றனர். கேரளம், ஆந்திராவில் இன்றளவும் கள் இறக்க அனுமதி உள்ளது. எனவே, தமிழ்நாட்டிலும் கள் இறக்க அனுமதிக்குமாறும், தமிழக பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறும் உத்தரவிடவேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர், ‘‘இது அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடையது. எனவே, அரசின் விளக்கத்தை கேட்காமல் எந்த முடிவுக்கும் வரமுடியாது. எனவே. இந்த மனுவிற்கு அரசு தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.