தண்டையார்பேட்டை: ராயபுரம் வைகுண்டம் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (56). இவர் போதைப்பொருள் பதுக்கி விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து ஜாமீனில் வந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அதேபோல், மணலி ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்த முருகன் (19) என்பவர் மீதும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இவர்கள் நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் உள்ள என்.டி.பி.சி நீதிமன்றத்தில் போதைப்பொருள் கடத்தல், பதுக்கல் சம்பந்தமாக விசாரணைக்காக வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருவரையும் சோதனை செய்தனர். அதில் தண்டபாணி, முருகனிடம் இருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இருவரையும் உயர் நீதிமன்ற போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு வந்தபோதே கஞ்சாவுடன் இருவர் வந்த சம்பவம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.