அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றம் அகற்றுமேயானால் அதைவிட பெரிய அவமானம் நீதிமன்றத்திற்கு வேறு ஏதுமில்லை. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலையிட வேண்டும். உடனடியாக 7ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்றார். பின்னர், வழக்கறிஞர்கள் அனைவரும் ரோஜா பூவை கையில் ஏந்தி உயர் நீதிமன்ற ஆவின் நுழைவாயில் முன்பாக வைத்திருந்த அம்பேத்கரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் எம்.வேல்முருகன் தலைமையில் ஏராளமானோர் அம்பேத்கர் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்க கூடாது என்ற சுற்றறிக்கையை எதிர்த்தும், அந்த சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி என்.எஸ்.சி போஸ் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம்: தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தலைவர் ராம் தலைமையில் நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள், மூத்த வழக்கறிஞர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். ஆலந்தூர்: ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நேற்று பணியை புறக்கணித்து நீதிமன்ற நுழைவாயிலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை அகற்ற வேண்டும், என்ற உத்தரவை திரும்ப பெறு, அம்பேத்கர் படத்தை வைக்க அனுமதி வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் பால.அமுதநாதன், சேகர், சந்திரசேகர், ஆனந்தகுமார் உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.