இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலையொட்டி சிறையில் உள்ள இம்ரான் கானை அவரது கட்சி தலைவர்கள் சந்திக்க இஸ்லாமாபாத் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான்(71) மீது அல்-காதிர் அறக்கட்டளை ஊழல், தோஷகானா அரசு கரூவூல ஊழல் உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில் அல்-காதிர் தோஷகானா வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
அல்-காதிர் அறக்கட்டளை ஊழல், அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்குகளில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இம்ரானின் பூர்விக நகரமான மியான்வலி மற்றும் லாகூரில் உள்ள 2 தொகுதிகளில் கான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து தேர்தல் வியூகங்கள் பற்றி விவாதிக்க கட்சி உறுப்பினர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என கோரி இம்ரான் கான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மியாங்குல் ஹசன் அவுரங்கசீப், தேர்தலுக்கு முன்பாக இம்ரான் கானின் கட்சி தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கானை சிறையில் சந்திக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.