மகன் காதல் திருமணம் செய்த வேதனையில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை

லால்குடி: லால்குடி அருகே மகன் காதல் திருமணம் செய்த வேதனையில் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி அண்ணாநகரை சேர்ந்தவர் ரமேஷ்(48). மரம் அறுக்கும் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுமித்ரா(38). இவர்களுக்கு ஒரு மகளும், முருகானந்தம்(21) என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. முருகானந்தம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார்.

ரமேஷ் சொந்த வீட்டில் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், இவர்களது காதல் திருமணத்திற்கு ரமேஷ், அவரது மனைவி சுமித்ரா ஏற்றுக்கொள்ளவில்லை.குடிப்பழக்கம் உள்ள முருகானந்தம் வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வந்து பெற்றோரை அடித்து துன்புறுத்தியதுடன் வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

வழக்கம்போல் நேற்று முன்தினம் முருகானந்தம் போதையில் வந்து பெற்றோரை துன்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த ரமேஷ், மனைவியுடன் தற்கொலை செய்ய முடிவு செய்து நேற்று முன்தினம் மாலை அரளி விதையை அரைத்து இருவரும் குடித்து விட்டனர். வீட்டில் மயங்கி கிடந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்தார். மேலும் சுமித்ரா திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி சுமித்ரா உயிரிழந்தார்.

Related posts

பர்படாஸில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து தவிப்பு

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்