நெல்லை: இரவு நேரங்களில் ஜோடியாக கரடிகள் உலா வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, யானை, கரடி, சிறுத்தை, மிளா, மான், காட்டெருமை, காட்டு பன்றி உட்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகிறது. இந்த வனவிலங்குகள் அவ்வபோது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலையடிவாரத்திலுள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இதில் மலையடிவாரப்பகுதியில் சுற்றி திரிந்த கரடிகள் சமீபகாலமாக விகேபுரம், சிவந்திபுரம், அகஸ்தியர்பட்டி ஊருக்குள் புகுந்துள்ளது. இவை பகல் நேரங்களில் புதர்களில் பதுங்கி இரவு நேரங்களில் சாலைகளில் ஹாயாக உலா வருகிறது. இந்த கரடிகள் சில நேரங்களில் பொதுமக்களை விரட்டுவது மட்டுமின்றி தாக்கி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வேலை முடிந்து வீடுகளுக்கு செல்வோர் ஒரு வித அச்சத்துடன் செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பாபநாசம் அருகேயுள்ள பசுக்கிடைவிளை காமராஜர் பகுதியில் இரண்டு கரடிகள் ஜோடியாக சாலையில் சுற்றி திரிந்தது. மேலும் அவ்வழியாக வேலைக்கு செல்வோரை கரடிகள் விரட்டி உள்ளது. இதனால் இந்த கரடிகளை தெருநாய்கள் விரட்டி செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.