புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளை ஏற்றுமதி செய்யும் முன் பரிசோதனை செய்ய ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்ட உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகள் உயிரிழந்தனர். இதேபோல், மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில், இருமல் மருந்தை உட்கொண்ட 70 குழந்தைகள் பலியாகினர். இதையடுத்து 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 203 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு, அவைகளில் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன், அரசு ஆய்வகங்களில் பரிசோதிக்க ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு முன்மொழிந்துள்ளது. அதன்படி, மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் ஆய்வகங்களில் மருந்துகளை சோதனை செய்யவும், அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் இருந்து பகுப்பாய்வு சான்றிதழை ஏற்றுமதியாளர்கள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.