சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை எக்காரணம் கொண்டும் வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து முகவர்கள் வெளியேறிவிடக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் மேஜைகளுக்கு ஏற்றார்போல் வாக்கு எண்ணும் முகவர்களை அதிமுக நியமித்துள்ளது.
அந்த முகவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிற நாற்காலிகளில் முதலில் சென்று அமர்ந்துவிட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே சென்றவர்கள் வாக்கு எண்ணிக்கை முடிவுற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை எக்காரணம் கொண்டும் மையங்களில் இருந்து வெளியே வரக் கூடாது, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரேனும் மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டால் அதனை உன்னிப்பாக கண்காணித்து, மேலதிகாரிக்கு தகவல் தெரிவித்து உரிய தீர்வினை காண வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.