முறைகேட்டை கண்டுபிடித்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பாராட்டு போலி சான்று மூலம் அரசு பணியில் சேர்ந்தவர்கள் மீது குற்ற வழக்கு: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் அதிரடி

மதுரை: போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தவர்கள் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த வக்கீல் சக்திராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: டிஎன்பிஎஸ்சி கடந்த 2020ல் நடத்திய குரூப் 1 தேர்வில் பங்கேற்றேன். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றேன். பிரதான எழுத்துத்தேர்வை முடித்து, நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டேன். தேர்வானோர் பட்டியலில் என் பெயர் இல்லை. தமிழ் வழி கல்வியில் படித்தோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறை பின்பற்றப்பட்டும், எனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, கல்லூரிக்கு சென்று முழுநேரமாக தமிழ் வழியில் பயின்றவர்களை தேர்வு செய்து புதிய பட்டியல் வெளியிட்டு, அதன்பிறகே குரூப் 1 பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டுமென மனு செய்திருந்தேன்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட் கிளை, நிர்ணயிக்கப்பட்ட முழு கல்வித்தகுதியையும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கே 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பயின்றதாக போலி சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்த லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டுமென கடந்தாண்டு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், ‘‘மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ்கள் குறித்து விசாரிக்கப்பட்டது. இதில், பல்கலை தரப்பில் முதலில் போலி சான்று என்றும், பின்னர் தகுதியற்ற சான்று என்றும் முரண்பட்ட தகவல்களை தெரிவித்தனர். தவறு நடந்துள்ளதால் லஞ்ச ஒழிப்புத்துறையின் சார்பில் மேல் நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்துள்ளதை கண்டறிந்ததற்கு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பாராட்டுகள். போலிச்சான்றிதழ் மூலம் உயர் பதவிகளுக்கு செல்வோரால் எப்படி நேர்மையாக பணியாற்ற முடியும்? அவர்கள் லஞ்சம் வாங்காமல் வேறு என்ன செய்வார்கள்? அவர்களால் கடமையை சரிவர செய்ய முடியுமா? எப்படியும் உயர்பதவிக்கு வர வேண்டுமென்ற லட்சியத்தில் அரசுத் தேர்வை நம்பி, இரவு பகலாக படித்து வருகின்றனர். அவர்களது எதிர்காலத்தை நினைத்தாலே அச்சமாக உள்ளது. போலிச்சான்றிதழ் மூலம் அரசுப்பணியில் சேர்ந்தவர்கள் மீது இந்நேரம் புகார் அளித்து குற்ற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்’’ என்றனர்.

பின்னர் நீதிபதிகள், ‘‘போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை கண்டறிந்து குற்றவழக்கு பதிந்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வானவரின் சான்றிதழ்களை முறையாக ஆய்வு செய்து, அவை உண்மையானவை என்பதை டிஎன்பிஎஸ்சி எதிர்காலத்தில் உறுதி செய்ய வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குரின் அனுமதி கிடைத்ததும் உரிய மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர். போலிச்சான்றிதழ் மூலம் உயர் பதவிகளுக்கு செல்வோரால் எப்படி நேர்மையாக பணியாற்ற முடியும்? அவர்கள் லஞ்சம் வாங்காமல் வேறு என்ன செய்வார்கள்? அவர்களால் கடமையை சரிவர செய்ய முடியுமா?

Related posts

தாய்லாந்தில் இருந்து பச்சோந்திகளை கடத்தி வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் கைது

பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஒ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,400ஆக விற்பனை