இதனை அறிந்த சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் முரளிதரன், மாணவியின் பட்டபடிப்பிற்கு ஏற்படும் செலவுகள் அனைத்தையும் எத்திராஜ் கல்லூரி நிர்வாகமே ஏற்கும். அவருக்கு கட்டணமில்லா இலவச சேர்க்கை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி நேற்று மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில், பி.காம்(பொது) படிப்பிற்கான சேர்க்கை அனுமதி வழங்கி முழுச் செலவையும் நிர்வாகமே ஏற்றதற்கான சேர்க்கை ஆணையை, நிர்வாகத் தலைவர் முரளிதரன் மாணவியிடம் வழங்கினார்.
இது குறித்து மாணவி காயத்ரி கூறுகையில், உயர் படிப்பை நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். முதலில் கல்லூரியில் இருந்து அழைப்பு வந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் இடம் கிடைக்குமா என்ற சிறிய தயக்கம் இருந்தது. ஆனால், தற்போது அவர்களே அழைத்து சேர்க்கை ஆணையை வழங்கியபோது மகிழ்ச்சியாக இருக்கிறது. எத்திராஜ் மகளிர் கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் கல்லூரி முதல்வருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எத்திராஜ் மகளிர் கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் முரளிதரன் கூறுகையில், இன்றுதான் எங்கள் கல்லூரியில் 2023-24ம் ஆண்டுக்கான மாணவிகள் சேர்க்கையை தொடங்கி இருக்கிறோம். அதை முதலில் இந்த மாணவியிடமிருந்து தான் தொடங்கி இருக்கிறோம். மாநகராட்சி பள்ளிகளில் இது போன்ற சாதனைகள் புரிவது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பின்தங்கி மாநகராட்சி மற்றும் அரசுப்பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் எடுத்து சாதனை புரியும் மாணவிகளுக்கு நிச்சயம் எங்கள் கல்லூரியில் இடம் உண்டு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.