புதுடெல்லி: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் பேசும்போது,‘‘மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியை சேர்ந்த தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் மனைவியான கலாவதி பண்டுர்கரின் வீட்டுக்கு கடந்த 2008ம் ஆண்டு சென்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பார்த்தார்.
ஆனால், மோடி அரசு தான் கலாவதி பண்டுர்கருக்கு வீடு வழங்கி அவருக்கு பல்வேறு சலுகைளை அளித்துள்ளது என தெரிவித்தார். இந்த விவகாரத்தில்,மோடி அரசு பொய் சொல்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாக்கூர் டிவிட்டரில், அமித் ஷா வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.