பெரம்பலூர்: பெரம்பலூர் தண்ணீர் பந்தலில் ஆயுதப்படை வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஆயுதப்படை போலீசாருக்கான பயிற்சி மையம், மோப்பநாய் படைப்பிரிவு, ஆயுதப்படை போலீசாருக்கான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. ஏ பிளாக்கில் வசிக்கும் காவலர் சதீஷ்குமார் மனைவி பிருந்தா (24), தனது வீட்டின் முன்பு படிக்கட்டில் நின்றுகொண்டு செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அதே பிளாக்கில் தங்கியுள்ள ஆயுதப்படை காவலரான மனோகரன் மகன் பிரபாகரன் (31) மதுபோதையில் தனது வீட்டுக்கு வந்தார்.
திடீரென தவறான நோக்கத்தில் அங்கு நின்று கொண்டிருந்த பிருந்தாவின் வாயை பொத்தி மேல்தளத்துக்கு தூக்கி செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பிருந்தா, பிரபாகரனை தள்ளி விட்டு விட்டு, தனது வீட்டுக்கு ஓடி வந்து கணவர் சதீஷ்குமாரிடம் கூறினார். இதுதொடர்பாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் பிருந்தா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பிரபாகரனை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர். இந்நிலையில் ஆயுதப்படை காவலர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்து எஸ்பி ஷ்யாமளா உத்தரவிட்டார்.