ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க கோரி விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஊத்துக்கோட்டை வட்டத்தில் தாராட்சி, பனப்பாக்கம், பேரண்டூர், பெரியபாளையம், வடமதுரை என 53 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் நெல், வேர்கடலை, கரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை நட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 2022 – 2023ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.
இந்தநிலையில், எல்லாபுரம் – ஊத்துக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனரை மாற்ற வலியுறுத்தியும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று வேளாண்மை அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், விவசாய சங்க ஒன்றிய தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் ஆஞ்சநேயலு, மாவட்டச் செயலாளர் வெங்கடாதிரி, மாநில உயர் மட்டக்குழு தலைவர் விஜயபிரசாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 2022 – 2023ம் ஆண்டு பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும், ஊத்துக்கோட்டை வேளாண் உதவி இயக்குனரை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர், விவசாயிகள் ஊர்வலமாகச் சென்று வேளாண் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அப்போது, மாவட்ட துணைத்தலைவர் ஞானப்பழனி, ஒன்றிய செயலாளர் துளசி ராம், ஒன்றிய பொருளாளர் கோவிந்தராஜ் லட்சிவாக்கம் வடிவேல், கும்மிடிப்பூண்டி மோகனசுந்தரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.