காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறையில் பணியாற்றுவதற்காக தேர்வு செய்யப்பட்ட 43 பேருக்கு பணி நியமன ஆணையினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 24ம்தேதி நடைபெற்றது. இந்த, தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 நபர்களுக்கு கடந்த மாதம் 19ம்தேதி நேர்முக தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில், ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், இட ஒதுக்கீடு மற்றும் இனச்சுழற்சி முறையின் அடிப்படையிலும் 43 நபர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு, தேர்வு செய்யப்பட்ட 43 பேருக்கு கூட்டுறவுத்துறையில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வழங்கினார். நிகழ்வின்போது, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களுக்கான இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.