சென்னை: கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் கோபால் அறிவிப்பு: தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-23ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2023-24ல் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப் போலவே அவர்களுடைய சம்பளத்தில் 10 சதவீதம் போனஸ் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
போனஸ் சட்டத்தின் கீழ் வராத, தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3000, தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2,400 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 44,270 பணியாளர்களுக்கு ரூ.28 கோடியே ஒரு லட்சம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.