ஊட்டி: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் வலம் வரும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் இருபுறங்களிலும் வனப்பகுதி நிறைந்து உள்ளன. இந்த பகுதியில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கி உள்ளதால், சமவெளி பகுதிகளில் இருந்து யானைகள் பலாப்பழங்களை உட்கொள்ள இங்கு அடிக்கடி வந்து செல்கின்றன.
இந்நிலையில், நேற்று குன்னூர் மரப்பாலம் பகுதியில் ஒற்றை தந்தத்துடன் யானை ஒன்று முகாமிட்டது. இதனால் அந்த பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் பலர் அந்த யானை அருகே சென்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து வருகின்றனர். இதனால் பெரும் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த காட்டு யானையை கண்காணிக்க வனத்துறை தனிக்குழு ஒன்றை அமைத்து கண்காணித்து காட்டிற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், விலங்கு ஆர்வலர்கள், வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.