மங்களூரு: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மங்களூரு வடக்கு தொகுதி பாஜக எம்எல்ஏ பரத் ஷெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரு மாநகராட்சி உறுப்பினர் அனில்குமார் என்பவர் காவூர் போலீசில் அளித்த புகாரில், ‘நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, சிவனின் புகைப்படத்தை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி அவையில் காட்டினார். சிவனின் புகைப்படத்தை அவையில் காட்டி பேசியதற்காக, ராகுல்காந்தியை அறைய வேண்டும் என்று மங்களூரு வடக்கு தொகுதி பாஜக எம்எல்ஏ பரத் ஷெட்டி பேசியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார்.
முன்னதாக பாஜக எம்எல்ஏ பரத் ஷெட்டியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, மங்களூரு மாநகராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் எம்எல்ஏ பரத் ஷெட்டிக்கு எதிராக 351(3), 353 ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக மங்களூரு நகர டிசிபி சித்தார்த் கோயல் தெரிவித்தார். மாநகராட்சி உறுப்பினர் அனில் குமார் அளித்த புகார் மற்றும் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.